Tamil Stories தமிழ் கதைகள்
5.63K subscribers
1 video
23 links
தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story
Download Telegram
கதை #S61
நீங்கள் உபயோகித்த முறை தான்


ஒரு விசிறி வியாபாரி, பனை ஓலையால் ஆன விசிறிகளை விற்றுக் கொண்டு அவன் வீதியில் நடந்து போகிறான். இந்த விசிறி நூறு வருடம்உழைக்கும், அதனால் நூறு ரூபாய் என்று கூவிக் கூவி விற்கிறான்.

தனது மாளிகையின் ஜன்னலிலிருந்து இதைப் பார்த்த மன்னனுக்கு ஒரே வியப்பு. மன்னன் விசிறி வியாபாரியை மாளிகைக்கு அழைத்து, என்ன விளiயாடுகிறாயா.. அற்பமான பனை ஓலை விசிறி இது. ஒரே ஒரு ரூபாய் கூடப் பெறாது. இதற்கு நூறு ரூபாயா? என்று கேட்கிறான்.

மன்னரைத் தான் அதிக விலை சொல்லி ஏமாற்ற முயன்றதை ஒப்புக் கொள்ள விசிறி வியாபாரி தயாராக இல்லை. அதனால் அவன், மன்னா... இது அதிசய விசிறி. நூறு வருடம் உழைக்கக் கூடியது. அதனால் தான் நூறு ரூபாய் என்றான். நூறு ரூபாய் கொடுத்து இந்த விசிறியை வாங்கிக் கொள்கிறேன். ஆனால், இது நூறு வருடம் உழைக்கா விட்டால் உன் தலை துண்டாகிவிடும், ஜாக்கிரதை என்று மன்னர் எச்சரித்து அனுப்பினார்.

சந்தேகப்பட்டது போலவே பனை ஓலை விசிறி, சில நாட்களில் கிழிந்து விட்டது. காவலர்கள் போய் விசிறி வியாபாரியைத் தேடி அரண்மனைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். மன்னனும் விசிறி வியாபாரியின் தலையை வெட்டச்சொல்லி தீர்ப்பு வழங்கிவிட்டார்.

அந்த நேரம் விசிறி வியாபாரி சொன்னான். மன்னா, நான் இறப்பது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், நூறு வருடம் உழைக்கக் கூடிய இந்த விசிறி உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் கிழிந்து போனது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதனால் என் தலையைத் துண்டிப்பதற்குமுன் நீங்கள் இந்த விசிறியை எப்படி உபயோகித்தீர்கள் என்று ஒரு முறை சொல்ல முடியுமா? என்று கேட்டான்.

சாகப் போகிறவன் என்று மன்னனும் விசிறியை எடுத்து விசிறிக் காட்டினான். விசிறி வியாபாரி பதறுவது போல் நடித்தான். அடடா, இங்கேதான் தவறு நடந்து விட்டது. மன்னா இந்த விசிறி நூறு வருடம் உழைக்கும், இது உண்மை, ஆனால், இதுபோல விசிறக் கூடாது. விசிறியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு முகத்தை நாம்தான் விசிறியின் முன்னால் ஆட்ட வேண்டும் என்று சொன்னான்.

அப்படி உபயோகித்தால் தான் நீண்ட காலம் என் விசிறி உழைக்கும். என் விசிறியின் மேல் குறை இல்லை. நீங்கள் உபயோகித்த முறை தான் தவறு
கதை #S62
புகழ்ச்சி செய்பவர்களிடம்

ஒரு ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவருக்குப் பணம் தேவைப்பட்டது. பக்கத்து ஊரில் ஒரு பணக்காரனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்று வரலாம் என்று எண்ணினார்.

அவன் ஒரு பெரிய கஞ்சன் என்பது அவருக்குத் தெரியாது. புலவர் பணக்காரனை புகழ்ந்து சில பாடல்கள் பாடினார். பணக்காரன் 'நூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் இன்னும் சில பாடல்கள் பாடினார். அவன் இருநூறு ரூபாய் தருகிறேன் என்றான். புலவர் மேலும் பாடினார்.

அவன் 'முன்னூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் மேலும் உற்சாகத்துடன் பாடினார்.

அவன் 'நானூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் மேலும் உற்சாகத்துடன் பாடினார்.

அவன் 'எழுநூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.

இறுதியாக பணக்காரன் புலவருக்கு நூறு ரூபாய் மட்டுமே கொடுத்தான். புலவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

புலவர் பணக்காரனிடம் 'ஐயா, நீங்கள் 700 ரூபாய் தருவதாகச் கூறினீர்களே" என்றார். அதற்கு அவன் 'புலவரே, நான் திரும்பத் திரும்ப நூறு ரூபாய் தருகிறேன் என்று தானே கூறினேன்.

முதலில் 'நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'இரு. நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'முன் நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'நான் நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'எழு, நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன்.

நீங்கள் தான் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்றான். புலவர் வெறும் நூறு ரூபாயோடு ஏமாற்றத்துடன் புலவர் திரும்பிச் சென்றார்.

நீதி : 1) ஏமாற்றுபவர்கள் எப்போதும் ஏமாற்றத்தான் செய்வார்கள்.
2) புகழ்ச்சி செய்பவர்களிடம் மயங்க கூடாது
கதை #S63
புத்திசாலி மீன்


சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத்தான் இருந்தது.

சற்று நேரம் கழித்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார். “ஒரு கிலோ 100 ருபாய் ஆகும், சார்,” என்று அவன் கூறினான்.

சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக்கொண்டிருந்ததால், அவனிடம் சென்று இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கச்சொல்லி, பேரம் பேசி வாங்கலாம் என்று நினைத்து அவனை அணுகினார்.

விலை என்னவென்று விசாரித்தபோது, அவனோ, “ மீன் விலை ஒரு கிலோ 500 ருபாய் ஆகும், சார்,” என்று கூறினான்.

விலையைக்கேட்டுத் திடுக்கிட்டுப்போன அவர், “ என்னப்பா இது? அந்தப் பையனும் இதே மாதிரி மீன்தான் வைத்திருக்கிறான். அவன் விலை 100 ரூபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 500ரூபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?” என்று வினவினார்.

அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சொன்னான்: “ சார், பார்க்கத்தான் இரண்டும் ஒரே மாதிரியாகத்தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால்தான் கூடுதல் விலை,” என்றான்.

“அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?” என்று கேட்டார் வாடிக்கையாளர்.

“சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால்தான் இவ்வளவு விலை,” என்றான் பையன்.

“உண்மையாகவா?” என்று வியந்தார் வாடிக்கையாளர்.

“வாங்கிப்பாருங்கள், சார், உங்களுக்கே தெரியும்,”

“சரி, சரி, ஒரு கிலோ கொடு. “ட்ரை” பண்ணிப் பார்க்கிறேன்”, என்று சொல்லி, ஒரு கிலோ மீனை 5௦௦ ருபாய்க்கு வாங்கிச் சென்றார்.

அடுத்தடுத்து தொடந்து 6 நாட்களுக்கு அதே மீனை அதே பையனிடம் அதே விலைக்கு வாங்கிச் சென்று சாப்பிட்டுவந்தார்.
புத்திசாலித்தனத்தில் ஏதாவது முன்னேற்றம்...? ம்ஹும்....! எதுவும் தெரியவில்லை.

அப்போதுதான் அவருக்குப் புரிந்தது “புத்திசாலி மீன்” என்று அந்தப் பையன் சொன்னது எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று. கடுமையான கோபம் வந்துவிட்டது அவருக்கு. “இன்று அவனைப்போய் “உண்டு அல்லது இல்லை” என்று ஆக்கிவிடவேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் சந்தைக்குச் சென்றார்.

அந்தப் பையனிடம் சென்று, தன் கோபத்தை வெளிக்காட்டாமல், “என்னப்பா, அந்த புத்திசாலி மீன் இருக்கா?”, என்று இவர் கேட்க, இவரின் கோபத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனும், “ஓ, இருக்கே. உங்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருகிறேனே!” என்று உற்சாகமாகக் கூறினான்.

வந்ததே கோபம் அவருக்கு! “அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்? உன் பேச்சைக்கேட்டு ஒரு வாரமாக நானும் அந்த மீனை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன். அணுவளவும் முன்னேற்றம் இல்லை. புத்திசாலி மீனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. என்னை ஏமாற்றிவிட்டாய். உடனடியாக என் பணத்தையெல்லாம் திருப்பித் தந்துவிடு. இல்லையென்றால் உடனடியாகப் போலீசைக் கூப்பிட்டுவிடுவேன்”, என்று கத்தினார்.

பையனோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான்: சார்,இங்கே பாருங்க. இதே மீனை புத்திசாலி மீன் என்று நான் ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்னபோது நீங்கள் ஆட்சேபிக்கவேயில்லை. இப்போ பாருங்க, ஒரு வாரத்திலேயே இது புத்திசாலி மீன் இல்லை என்று நீங்களே கண்டு பிடித்துவிட்டீர்கள். என்ன பிரமாதமான முன்னேற்றம்! இதைப் போய் முன்னேற்றம் இல்லை என்று சொல்கிறீர்களே, சார் ! தொடர்ந்து சாப்பிடுங்க, சார். இன்னும் பிரமாதமான முன்னேற்றம் கிடைக்கும்.”

வாடிக்கையாளர் வாயடைத்து நின்றார்.
கதை #S64
நானும் புலிதான்டா

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது...... எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு, புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.

மாப்பிளை புலிக்கோ... கர்வம் தாங்கல.

திடீர்னு ஒரு பூனை மட்டும், சரசரன்னு... புலிக்கிட்ட போய் கை கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு. புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட, "டேய் இத்தனைப் பேரு என்னய தூரமா நின்னு வாழ்த்திட்டு போறானுங்க..... ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ ! நான் புலிடா" ன்னு சொன்னுச்சு.

அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே "அடேய் கிறுக்கு பயலே! நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதான்டா " ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு !?
கதை #S65
நான் புலி.ய்.ய்...டா...!

உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது! அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!

இந்தியா பூனை, பாகிஸ்தான் பூனை, ஜெர்மனிபூனை, ஆஸ்திரேலியா பூனை, இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!

அமெரிக்கா பூனையல்லவா பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு, கொழுவென இருந்தது!

கடைசி இறுதி சுற்று...., இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!

பார்வையாளர்களுக்கு வியப்பு! சோமாலியா நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது, இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!

பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்! போட்டித்துவங்கியது! அமெரிக்கா பூனை அலட்சியமாக சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது!

சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி! அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு ப்பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!

கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது. பார்வையாளர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்கள்! சற்று நேரம் சென்றபின், மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை!

சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.! போட்டியில் வென்றதற்காக சோமாலியா பூனையை
எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள். மெதுவாக எழுந்து சோமாலியா பூனையின்அருகில் சென்று இத்தனை நாட்டு பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது எப்படி? என்று கேட்டது அமெரிக்க பூனை!

அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக சோமாலியா பூனை சொன்னது!

நான் பூனையே இல்லை.!

புலி.ய்.ய்...டா...!

என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்! பாலும், கறியும் உண்டாலும் பூனை பூனைதான்! பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்!
கதை #S66
இனிப்பான ஆப்பிள்

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.

அங்கு வந்த அவளின் தாய், "நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு" என்றாள்.

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி.
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள். பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்… தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.

உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள். "அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க" என்றாள்.

அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
கதை #S67
ஐ லவ் யூ அப்பா


ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான்.

சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார்.

அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா... என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்.

அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று… அந்த வாசகம்

” ஐ லவ் யூ அப்பா”.

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?
கதை #S68
அடித்த வலி


அப்பாவுக்கு வயது 108.மகனுக்கு வயது 90. இருவரும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர்.

அப்பா முன்கோபி. சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார். ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார். ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது மகன் கண்ணீர் விட்டு அழுதார்.

“இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?” என்று தந்தை கேட்டர்.

மகன் சொன்னார், “அப்பா, இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும். நானும் பொறுத்துக் கொள்வேன். இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை. ஐயோ! உங்கள் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்று எண்ணித்தான் அழுதேன்.” என்றான்.
கதை #S69
சில நிமிட மெளனங்கள்


"வெளியில போறியப்பா? " கேட்டார் அப்பா.

“ஆபீஸ் போறேன் பா” பதில் அளித்தான் மகன்.

“இன்னைக்கு வானிலை சரியா இருக்காதுன்னு செய்தில படிச்சேன் டா, இன்னைக்கு ஒரு நாள் வேணா விடுப்பு எடுத்துகோடா”, அப்பா கூறினார்.

“அப்பா, ஏற்கனவே இந்த மாசம் நிறையா நாள் விடுப்பு எடுத்துட்டேன், அப்பறம் பாருங்க வானம் எவ்வுளவு தெளிவா இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்ல.

“சரி, அப்ப ரெயின் கோட்டையாவது (rain coat) போட்டுட்டு போடா, சொன்னார் அப்பா.

உங்களை சமாளிக்க முடியாது அப்பா,..சரி நான் ரெயின் கோட் போட்டுட்டு போறேன், கிளம்பினான் மகன்.

மகன் தனது பைக்கில்(bike) ஏறி அலுவலகம் சென்றான். அவன் பயணித்த 10 நிமிடத்தில், தீடிரென மழை கொட்ட ஆரம்பித்தது. ரெயின் கோட் போட்டதுனால நனையாமல் அலுவலகம் சென்றான். அலுவலகம் சென்றடைந்தவுடன் தொலைபேசியில் அப்பாவை கூப்பிட்டு, “உங்கள சமாளிக்க முடியாதுல”? என்று சிரித்தான். அப்பா சிரித்தார்.

ஆண்டுகள் கடந்தன.

ஒரு காலை மகன் அலுவலம் கிளம்ப தயாரானான். “இன்னைக்கு வானிலை நல்லா இருக்கு” என்று நினைத்துக்கொண்டு தனது வாகனத்தில் ஏறினான். அவன் பயணித்த சில நிமிடத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது.

மழையில் நனைந்து கொண்டே அலுவலகம் சென்றான். அலுவலகம் சென்று தனது நாற்காலியில் உட்காந்து, தனது சிறு தோள்பையை கழட்டினான்.

தனது தோள்பையில் இருந்த தனது அப்பாவின் சிறு புகைப்படத்தை பார்த்து சில வினாடிகள் புன்னகை செய்தான். அதன் பிறகு சில நிமிடங்கள் மெளனமாய் தனது தந்தையின் புகை படத்தை உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த சில நிமிட மெளனங்கள் தான் இந்த கதையின் கருத்து.
கதை #S70
எனக்கு தான் அப்பா இருக்காரே!

அப்பாவும் மகளும் அலாவுதின் அற்புத விளக்கு படம் பார்த்து கொன்டு இருந்தனா்.

மகள்: அப்பா.

அப்பா: என்ன டா கண்ணா?

மகள்: அது என்ன அப்பா பெருசா இருக்கு?

அப்பா: அது தாண்டா பூதம்.

மகள்: அது என்ன பா பண்ணும்?

அப்பா: அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.

மகள்: என்ன கேட்டாலும் கொடுக்குமாபா?

அப்பா: ஆமா உனக்கும் வேணுமா அது மாதிரி பூதம்?

மகள்: எனக்கு வேணாம் பா. அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல அதுனால தான் சாமி பூதம் குடுத்து இருக்காரு எனக்கு தான் அப்பா இருக்காரே கேட்ட எல்லாம் வாங்கி கொடுக்க. எனக்கு கடவுள் குடுத்த அற்புத விளக்கு அப்பா தான்..
கதை #S71
தீய்ந்த தோசை


அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.

அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது. “நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.

அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள், “அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”.

அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும், கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.

ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை”.

அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது. குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.
கதை #S72
மகனே இன்று முதல் நீ


அந்த அண்ணாச்சி மிகவும் நல்லவர். அவருடைய மனைவி இறந்ததில் இருந்து பெரும் குடிகாரராக மாறிவிட்டார். குடிக்கு அடிமையாகவே ஆகிவிட்டார். ஒருநாள் ஒரு பாதிரியார் அவரை குளத்தின் அருகில் சந்தித்தார்.

அவர் மீது கருணைக் கொண்டு அவருக்கு அவரைத் திருத்த நினைத்தார். எனவே அவரை குளத்து நீரில் மூன்று முறை மூழ்கி எழ சொன்னார். அவரும் அவ்வாறே மூன்று முறை மூழ்கி எழுந்தார்.

"மகனே இன்று முதல் நீ "அந்தோணி " என அழைக்கப்படுவாய். நீரிலிருந்து நீ வெளியேறும் முன்பு நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரவேண்டும். இனி மேல் மதுஅருந்த மாட்டேன்" என்று.

குடிகார அண்ணாச்சி என்ற அந்தோனி மறுமொழியாக,

"சாமி, சாயா குடிக்கலாமா?" என்று கேட்க,

பாதிரியாரும், "ம் டீ குடிப்பதில் பிரச்சனை இல்லை" என்றார்.

விட்டிற்கு வந்த குடிகார அண்ணாச்சி, "ரம்" பாட்டிலை பக்கெட்டில் இருந்த தண்ணிரில் 3 முறை முக்கி எடுத்து, "ரம்மே, ரம்மே.... இன்று முதல் நீ சாயா அல்லது டீ என்று அழைக்க படுவாய்" என்று சொல்லி தனது வேலையே தொடர்ந்தார்.
கதை #S73
நல்ல பெயர்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு…!! கடைக்காரர் விரட்டி விட்டார். திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு....

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்... நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது… கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்…

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல்... அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது... கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது… ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க... நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

நீதி: நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான், நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
கதை #S74
முட்டாள் மாடு


ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிடக் கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து, எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.

மாடு சொன்னதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளைத் தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமேச் சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்குப் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.

பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது.

மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று, புல்லின் அளவை அதிகரிக்கக் கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிகப் பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்யச் சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான்.

மாடும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டது. புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்குப் பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று, வழக்கமான கோரிக்கையை வைத்தது.

அப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்குச் செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிகப் புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.

கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது.

அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிகப் புல் கேட்காதே” என்றான்.

தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயேப் பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியைச் சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை.

சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான்.

“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.

வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை. உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.

வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வரத் தொடங்கியது. “எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்ததாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.

அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்கப் போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்” என்றான்.

மாடு தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கதை #S75
அரசனின் தவறு


ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன. எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்... ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார். "பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"

சற்றே யோசித்த அரசன், “பத்து நாட்கள்தானே... சரி” என அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.

அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார். முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார். பத்து நாட்கள் முடிந்தது.

அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான். சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான். அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.

"இது எப்படி சாத்தியம்?"

அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார். "அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா?"

மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன், இந்த முறை மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.

நீதி: நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா... அதுல மாற்றமே இருக்காது.
கதை #S76
போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய்


மூன்று அரசியல் வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் தீடிரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள்.

மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது. மூவரும், மேலோகம் சென்றார்கள் அங்கு யமதர்ம ராஜா அமர்ந்து எல்லோருடய பாவ, புன்ய கணக்குகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கி கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும், பகட்டான தோற்றம் அளித்தார். பயந்து கொண்டே இந்த மூவரும் தனித் தனியே அவர் அருகே செல்ல…

முதல் இருவரையும் சொர்க்கத்துக்கு போக சொன்னாரு… இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆனால்,

மூன்றாவதாக உள்ளவரை நரகத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு ஆத்திரம் தாங்க முடிய வில்லை. அவர் யமதர்ம ராஜா விடம் சென்று நாங்கள் மூவரும் மக்களுக்கு தொண்டு புரிந்துள்ளோம் அப்படி இருந்தும் ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை? என்று வினவ?

உடனே யமதர்ம ராஜா அவர் கேட்டுக்கொண்டமைக்கு, உங்கள் மூவருக்கும் போட்டி வைக்கிறேன் நீயே போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய் என்று மூன்றாவது நபரிடம் யமதர்ம ராஜா உரைத்தார்.

நான் உங்கள் மூவருக்கும் முதலில் எழுத்து முறை தேர்வு வைக்கிறேன்.

முதல் போட்டி ஆரம்பம்
நபர் 1 – ஆங்கிலத்தில் INDIA என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 2 – ஆங்கிலத்தில் ENGLAND என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 3 – ஆங்கிலத்தில் CZECHOSLOVAKIA என்று எழுத சொன்னார் அந்த தலைவருக்கு தெரிய வில்லை பாஸ் அகவில்லை.

மறுபடியும் அந்த மூன்றாவது நபர் மன்றாடி யமதர்ம ராஜாவிடம் ஒரு சான்ஸ் கேட்டார். அதற்கும், அப்படியை ஆகட்டும் என்று சொன்னார்.

இது தான் கடைசி சான்ஸ் என்பதால், இந்த போட்டியில் எப்படியும் ஜெய்த்துவிட வேண்டும் என்று அவர் மனதில் ஒரு வெறி …..

இரண்டாவது போட்டி தொடங்கியது,
நபர் 1 – எப்பொழுது இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தது? 1947 என்று சொல்லி- பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 2 – அந்த போராட்டத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள் என்று கேட்டார்? அதற்க்கு அவர் மூன்று ஆப்ஷன் தந்தார். 1,00,000 – 2,00,000 – 3,00,000.
2,00,000 என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார் நபர் 2.
நபர் 3 – அந்த 2,00,000 வீரர்களுடைய விலாசம் கேட்டார்?
அந்த மூன்றாவது நபர் அதிர்ந்து தோல்வியை ஒப்பு கொண்டு நரகத்தை அடைந்தார்.

நீதி: “மானேஜ்மென்ட் ஸ்கெட்ச் போட்டுட்டாங்கனா தூக்காமா விட மாட்டாங்க”
கதை #S77
ஆபிசில் நிறைய வேலை

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார். பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார். அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர், “நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம். அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், “ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!”
கதை #S78
மேனேஜரின் இரக்கம்

ஒரு பணக்கார மேனேஜர் ஒருவர் காரில் போய்க்கொண்டிருந்த பொழுது சாலையில் இருவர் புற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார்.

பின் அந்த இருவரின் அருகில் சென்று," நீங்கள் ஏன் இப்படி புற்களை உண்கிறீர்கள் எனக் கேட்கிறார்.

உடனே அவர்களில் ஒருவன்," எங்களிடம் உணவு சாப்பிடுவதற்கான பணம் இல்லை, எனவே நாங்கள் புற்களை தான் உண்ண வேண்டும் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர், சரி நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களுக்கு உண்ண கொடுக்கிறேன் என்கிறார்.

உடனே அந்த ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள், அதோ அந்த மரத்தடியில் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே மேனேஜர்," அவர்களையும் அழைத்து வா எனக் கூறி விட்டு, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு ஏழையிடம்.. "நீயும் இவர்களுடன் வரலாம் " என்கிறார்.

உடனே அந்த மற்றொரு ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர்," சரி அவர்களையும் அழைத்து வா" என்கிறார்.

இவர்கள் அனைவரையும் அந்த பெரிய காரில் அமர்த்தி அந்த மேனேஜர் அவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

அப்பொழுது அந்த ஏழைகளில் ஒருவர், " ஐயா.. உங்களுக்கு மிகவும் இளகிய மனது, எங்கள் எல்லோரையும் உங்களுடன் இப்படி அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே" என்கிறான்.

மேனேஜர் உடனே," இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கின்றது, உங்களுக்கு என் வீடு அமைந்துள்ள இடம் மிகவும் பிடிக்கும். ஏறத்தாழ அங்கே உள்ள புற்கள் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றார்.

நீதி: மேனேஜர்களை எப்பொழுதும் நம்பாதீர்கள்.....
கதை #S79
பெரியவரின் இரக்கம்


ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல் இலவச உபதேசங்கள்:
“பாத்து போக கூடாதா? " "என்னடா கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை கொடுத்தார்.. அதோடு "தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்” என்றார்.

மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள். முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் "தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவியோ?" என்றார்.

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். "அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"
கதை #S80
தலைவலிக்கு நல்ல மருந்து


இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.

அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.

முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது". இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார்.

"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"

இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்".
அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்"

வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."

"ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி.

"உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்க படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஒரு இருபது அடி நீள படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்கு தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"

"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.

"இல்லை, அவர், தனக்கு தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன்."

முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"

"அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக ஆக இருந்தேன், ஏன் ?"

"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்த கடையை பார்த்துக்கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்" என கூறினார்.
கதை #S81
ஆயுள் முழுவதும் வேலையாட்கள்


ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டிக் கொள்வதற்காக ஒரு சலூன் கடைக்குச் சென்றார். அவர் முடி வெட்டிக் கொண்டதும் அதற்குரிய பணத்துக்கு மேல் ஒரு ரூபாய் இலவசமாகக் கொடுத்தார்.

முடி வெட்டுபவருடைய முகம் மாறியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் மட்டுமே சேர்த்து தருவதா? என ஏளனமாக பார்த்தார்.

உங்களிடம் வேலை பார்க்கும் வேலையாட்கள் கூட பத்து ரூபாய் இலவசமாகக் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே தருகிறீர்கள் என்று கேட்டார்.

உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் வேலையாட்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் அப்பெரிய நிறுவனத்தின் முதலாளி.